சுரண்டை, பிப். 9: சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் இலவச சைக்கிள் வழங்கினார். சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். அதிமுக சுரண்டை பேரூர் செயலாளர் சக்திவேல், கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமை தலைமை ஆசிரியர் கனகராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிப் பேசினார். மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகள் மல்லிகா, கலைவாணி, பத்மா ஆகியோருக்கு தனது சொந்தநிதியில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கப்பரிசு வழங்கினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் கந்தசாமி நன்றி கூறினார். இதேபோல் சுரண்டை பேரண் புரூக் பள்ளியில் தலைமை ஆசிரியர் சவுந்திரராஜன் துரை தலைமைல் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.